×

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி: திருப்பூர் மாவட்டம் முதலிடம்; வழக்கம்போல் மாணவிகள் அசத்தல்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் இயங்கும் பள்ளிகளில் படித்து பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கான முடிவுகளை தேர்வுத்துறை நேற்று வெளியிட்டது. இந்த ஆண்டு தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே கூடுதலாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டில் மொத்த தேர்ச்சி வீதம் 94.56 சதவீதம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயங்கும் 7534 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி மேனிலைப் பள்ளிகளில் பிளஸ்2 வகுப்புகளில் படித்த மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி வரை நடந்தது. முன்னதாக, பிப்ரவரி 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடந்தன.

பொதுத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவ, மாணவியர் எழுதினர். இவர்களில் 3,52,165 பேர் மாணவர்கள். 4,08,440 பேர் மாணவிகள். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் அடங்குவர். தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்தபடி சென்னையில் உள்ள தேர்வுத்துறை இயக்ககத்தில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. பிளஸ் 2 தேர்வில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 94.56%. மாணவிகள் 3 லட்சத்து 93 ஆயிரத்து 890 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 96.44%. மாணவர்கள் 3 லட்சத்து 25 ஆயிரத்து 305 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி வீதம் 92.37%. மாணவர்களைவிட மாணவிகளே 4.07% அதிகம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த 2023 மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேர் தேர்வு எழுதி 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் மொத்த தேர்ச்சி வீதம் 94.03% அதை விட இந்த ஆண்டு கூடுதலாக (0.53%) தேர்ச்சி வீதம் வந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மேனிலைப் பள்ளிகளை பொறுத்தவரையில் 7532 உள்ளன. இவற்றில் பிளஸ் 2 தேர்வில் 2478 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதனை படைத்துள்ளன.

அரசு மேனிலைப் பள்ளிகளில் 397 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதனை படைத்துள்ளன. பள்ளிகளின் தேர்ச்சி வீதத்தை பொறுத்தவரையில், அரசுப் பள்ளிகள் 91.02%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.49%, தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.70%, இருபாலர் பள்ளிகள் 94.78%, பெண்கள் பள்ளிகள் 96.39%, ஆண்கள் பள்ளிகள் 88.98% தேர்ச்சி வீதம் பெற்றுள்ளன. பாடப்பிரிவுகளின்படி, அறிவியல் பாடப்பிரிவில் 96.35%, வணிகவியல் பாடப்பிரிவுகள் 92.46%, கலைப் பிரிவுகள் 85.67%, தொழிற்பாட பிரிவுகள் 85.85% தேர்ச்சி பெற்றுள்ளனர். முக்கிய பாடங்களை பொறுத்தவரையில் இயற்பியல் பாடத்தில் 98.48%, வேதியியல் 99.14%, உயிரியல் 99.35%, கணக்கு 98.57%, தாவரவியல் 98.86%, விலங்கியல் 99.04%, கணினி அறிவியல் 99.80%, வணிகவியல் 97.77%, கணக்கு பதிவியல் 96.61% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், தமிழ்ப்பாடத்தில் 35, ஆங்கிலம் 7, இயற்பியல் 633, வேதியியல் 471, உயிரியல் 652, கணக்கு 2587, தாவரவியல் 90, விலங்கியல் 382, கணினி அறிவியல் 6142, கணக்குப் பதிவியல் 1647, பொருளியல் 3299, கணினிப் பயன்பாடுகள் 2251, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 210 பேர் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதுதவிர 26 ஆயிரத்து 352 பேர் ஒரே ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர். பிளஸ் 2 தேர்வில் மாற்றுத்திறனாளிகள் 5603 பேர் பங்கேற்றனர். அவர்களில் 5161 பேர் தேர்ச்சி (92.11%) பெற்றுள்ளனர். சிறைவாசிகள் 125 பேர் தேர்வு எழுதி 115 பேர் (92%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் திருப்பூர் மாவட்டம் 97.45 சதவீத தேர்ச்சியை பெற்று முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு, சிவகங்கை மாவட்டம் 97.42 சதவீதம் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன. அரியலூர் மாவட்டம் 97.25% தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. அரசுப் பள்ளிகளை பொறுத்தவரையில் திருப்பூர் மாவட்டமே 95.75% சதவீதம் பெற்று முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, அந்தந்த பள்ளிகளின் மூலம் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்களை கணினியில் இருந்து பதிவிறக்கம் செய்து வழங்கவும் தேர்வுத்துறை ஏற்பாடு செய்திருந்தது.

மேலும், தேர்வு முடிவுகள் வெளியான உடனே, தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களின் செல்போன் எண்களுக்கும் அவர்கள் பெற்ற மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதுதவிர மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், நூலகங்களின் மூலமும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன் மூலம் மாணவ, மாணவியர் உடனடியாக தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடிந்தது. பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியர் துணைத் தேர்வு எழுதுவது தொடர்பான தேதிகள், தேர்வு அட்டவணை உள்ளிட்ட விவரங்களை தேர்வுத்துறை இன்று வெளியிடும் என்று தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.

3 பாடங்களில் 100% தேர்ச்சி
* உயிரி வேதியியல் பாடப் பிரிவில் 367 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் அனைவரும் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
* அடிப்படை சிவில் இன்ஜினீரிங் எழுத்து தேர்வில் 174 பேர் தேர்வு எழுதி அனைவருமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* ஜவுளி தொழில் நுட்பப் பாடப்பிரிவு எழுத்து தேர்வில் 97 பேர் எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

The post பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி: திருப்பூர் மாவட்டம் முதலிடம்; வழக்கம்போல் மாணவிகள் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Tiruppur District ,Chennai ,Examination Department ,Puducherry ,Thiruppur ,Tamil Nadu ,
× RELATED காங்கயம் பகுதியில் கூட்டு குடிநீர் குழாய்கள் பராமரிப்பு பணி ஆய்வு